'புங்குடுதீவு சிதைவுறும் நிலம்' - ஆவணப்படம்
- Thursday, 18 February 2016 14:04
யுத்தத்தின் விளைவால் உருக்குலைந்துபோன புங்குடுதீவு எனும் அழகிய ஊரின் நிலையைப்பற்றிப் பேசுகிறது படம். ஊரில் தற்போது வாழ்பவர்களே கதை மாந்தர்கள். அவர்களே கதைசொல்லிகள். ஊரின் தற்போதைய நிலையையும், எதிர்கொள்ளும் சவால்கள், இனிவரும் காலங்களில் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் பற்றியும் சொல்கிறார்கள். Narrative style இல் கதை சொல்லப்படவில்லை. ரிப்பீட் காட்சிகள் இல்லை. சற்றும் சலிப்பில்லாத ஆவணப் படம். நன்றி Gnanadas Kasinathar Surenthirakumar Kanagalingam Thanges Paramsothy
உண்மையில் இது புங்குடுதீவின் கதை மட்டுமல்ல. கைவிடப்பட்ட நிலங்களின் கதை.
இன்னும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டிலிருக்கும் விவசாய நிலங்களை தமது வாழ்வாதாரத்திற்காக எதிர்பார்த்திருப்போர் நம்மிடையே ஏராளமானோர். அவை பற்றி அவ்வப்போதாவது பேசிக் கொள்கிறோம்.
ஆனால் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டு எங்களால் கவனிக்காமல் விடப்பட்ட நிலங்கள் தொடர்பில் ஒருவகையில் நாம் அனைவரும் மௌனமாகவே இருக்கிறோம். எம்மளவில் அதற்கான காரணங்களை முன்வைக்கலாம். நாமே நம்மைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம். அதற்கப்பால் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதாக இருந்தால், நம் நிலங்களை மீளக்கட்டமைப்பதுடன் இன்றும் யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு நிர்க்கதியாயிருக்கும் நம்மவருக்கு பயனளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கலாம்.
மீளக்கட்டமைத்தல் என்பது கோவில்கட்டிக் கும்பாபிஷேகம் நடாத்துவது, மூன்று நேரமும் மணியடிப்பது, குழாய் ஸ்பீக்கர் கட்டித் திருவிழா கொண்டாடுவது தவிர வேறு பல காரியங்களும் இருப்பதாக ஆர்வலர்கள் சொல்லக் கேள்வி.
இந்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது, கைவிடப்பட்ட நம் நிலங்கள் தொடர்பில் எங்களை நாங்களே மானசீகமாகப் பார்த்துக் கொள்ளலாம். படத்தைப் பார்க்கும்போது 'கோவிலெல்லாம் புதுசாக் கட்டி இருக்கிறாங்கள் ஒரு கல்யாண மண்டபமும் கட்டினா நல்லா இருக்குமே' என்கிற அதி ஆக்கபூர்வமான சிந்தனை தவிர்த்து வேறேதும் தோன்றினால், இந்தப் படம் தனக்கான சரியான பார்வையாளனைச் சந்திக்கிறது எனலாம்.