சரியாக ஆட்சி செய்திருந்தால் இன்றைக்கு கால்கள் தேயும் வரை நடக்க வேண்டி ஏற்பட்டிருக்காது: மைத்திரிபால சிறிசேன
- Friday, 29 July 2016 15:39
முன்னாள் தலைவர்கள் சரியான முறையில் அரசாட்சி செய்திருந்தால் இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்லும் தேவை ஏற்பட்டிருக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “அதிகார மோகம் படைத்த ஒரு சிலர், தான் செல்லும் வழி அறியாமல் பாதையில் நடந்து சென்றபோதும் அரசாங்கம் சுயநினைவுடனும் பொறுமையுடனும் நடவடிக்கை மேற்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பாடுபடுகின்றது.
இன்று ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமையினால் எமது நாடு அவதிப்படுகின்றது. கடந்த அரசாங்கம் பாரிய அபிவிருத்தி பற்றி மார் தட்டிக்கொண்டு தாங்க முடியாத கடன் சுமைக்கு நாட்டை இட்டுச் சென்றபோதும் இக்கடன் சுமையினை புதிய அரசாங்கத்தினால் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்து மீண்டுமொரு ஆட்சியைக் கோரி இரு கால்களும் தேயும் வரை நடந்து செல்வதற்கான தேவை எனக்கு ஏற்படாது. எனது பதவிக்காலத்தில் எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் உரியவாறு நிறைவேற்றுவேன்.” என்றுள்ளார்.